மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஸ்பெயின் வசம்! | எப்படிக் கைமாறியது கால்களின் வெற்றி?
போட்டி முடிவில் ஸ்பெயின் 20 ஷாட்களை அடித்ததில் 12 கோல் நோக்கிச் சென்றன. உலக சாம்பியனாக களமிறங்கிய அர்ஜெண்டினாவோ வெறும் 2 ஷாட்களை மட்டுமே முயற்சித்தது; அவற்றில் ஒன்றுகூட கோல் நோக்கிச் செல்லவில்லை.

நியூயார்க் நகரில் நடைபெற்ற 48 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் உலக சாம்பியன் ஆனது. இந்தத் தொடர் மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையாக அமைந்தாலும், அர்ஜெண்டினாவின் தோல்விக்கு காரணம் அவரது ஆட்டமல்ல; ஸ்பெயின் வெளிப்படுத்திய முழுமையான ஆதிக்கம்தான்.
90 நிமிடங்கள் கோலின்றி முடிந்த நிலையில், கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் ஃபெர்ரான் டோரஸ் வெற்றிக் கோலைப் பதிவு செய்தார். பெட்ரோ போர்ரோவின் துல்லியமான கிராஸை நிக்கோ வில்லியம்ஸ் புத்திசாலித்தனமாக பின்புறம் தலையால் திருப்ப, மார்க் செய்யப்படாமல் நின்றிருந்த டோரஸ் அதை வலைக்குள் தட்டினார்.
மார்ட்டினேஸ் பல அபார சேவ்களை நிகழ்த்தியதால் மட்டுமே அர்ஜெண்டினா பெரிய தோல்வியில் இருந்து தப்பியது. இல்லையெனில் கோல் வித்தியாசம் இன்னும் அதிகரித்திருக்கும்.
போட்டி முழுவதும் பந்தைக் கட்டுப்படுத்திய ஸ்பெயின், அர்ஜெண்டினாவுக்கு சிந்திக்கவும் தாக்குதல் அமைக்கவும் இடமே கொடுக்கவில்லை. மெஸ்ஸியை மையமாகக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தும் ஸ்கலோனியின் உத்தி, முந்தைய போட்டிகளில் பலன் அளித்திருந்தாலும், உடல் வலிமை, வேகம், தந்திரம் ஆகிய அனைத்திலும் மேலோங்கிய ஸ்பெயினுக்கு எதிராக முற்றிலும் செயலிழந்தது.
இதன் விளைவாக உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் அர்ஜெண்டினா மிகவும் மோசமான தாக்குதல் புள்ளிவிவரத்தைப் பதிவு செய்தது. 115-வது நிமிடம்தான் அந்த அணி தனது முதல் ஷாட்டை முயற்சித்தது. வழக்கமான 90 நிமிடங்களில் ஒரு ஷாட் கூட இல்லை. கோல் நோக்கி சென்ற ஷாட் 117 நிமிடங்கள் வரை உருவாகவில்லை.

இறுதியில் விரக்தி உடல் மோதலாக மாறியது. ஏற்கெனவே ஒரு மஞ்சள் அட்டை பெற்றிருந்த என்சோ பெர்னாண்டஸ், கூடுதல் நேரத்தில் பாவ் குபார்சியை வீழ்த்தியதால் இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்று வெளியேறினார். அதன்பிறகு 10 வீரர்களுடன் போராடிய அர்ஜெண்டினாவுக்கு மீள்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது.
போட்டி முடிவில் ஸ்பெயின் 20 ஷாட்களை அடித்ததில் 12 கோல் நோக்கிச் சென்றன. உலக சாம்பியனாக களமிறங்கிய அர்ஜெண்டினாவோ வெறும் 2 ஷாட்களை மட்டுமே முயற்சித்தது; அவற்றில் ஒன்றுகூட கோல் நோக்கிச் செல்லவில்லை.
ஐரோப்பிய சாம்பியனாக வந்த ஸ்பெயின், 8 போட்டிகளில் ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்து உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. காலிறுதியில் பெல்ஜியம் மட்டுமே அந்த அணிக்கு எதிராக கோல் அடித்தது. கட்டுப்பாடான பாதுகாப்பு, இடைவிடாத அழுத்தம், பந்தை வசப்படுத்தும் திறன் ஆகியவை இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயினை எட்ட முடியாத அணியாக மாற்றின.
மறுபுறம், 8 கோல்கள், 4 அசிஸ்ட்களுடன் மற்றொரு சிறந்த உலகக் கோப்பை தொடரை நிறைவு செய்த மெஸ்ஸி, உலகக் கோப்பை மேடையிலிருந்து விடைபெற்றார். ஆனால் அவரது கடைசி உலகக் கோப்பை, ஸ்பெயின் கால்பந்தின் முழுமையான ஆதிக்கத்தை உலகம் கண்ட இரவாகவே வரலாற்றில் நினைவுகூரப்படும்.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது...
